Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட 43 பேர் ராஜ்யசபாவின் புதிய எம்.பி.க்களாக நேற்று பதவியேற்றனர். தமிழக எம்.பி.க்கள் 3 பேரும் தமிழிலேயே பதவி ஏற்றனர்.
ராஜ்யசபாவில் புதிய எம்.பி.க்கள் தேர்தல், பதவி ஏற்பு ஆகியவை கொரோனா லாக்டவுனால் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் நேற்று 20 மாநிலங்களின் 61 எம்.பிக்கள் பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது.
ராஜ்யசபா தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு முன்பாக நேற்று புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர். அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பதவி ஏற்றனர். இந்த மூவரும் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
தி.மு.க. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கொரோனா லாக்டவுனால் பதவியேற்கவில்லை என கூறப்படுகிறது. அதேபோல் முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் நேற்று பதவியேற்கவில்லை. மத்திய பிரதேச காங்கிரஸ் அரசை கவிழ்த்ததால் ராஜ்யசபா பதவி பெற்ற ஜோதிராதித்யா சிந்தியா நேற்று எம்.பி.யாக பதவியேற்றார்.
இன்றைய தினம் மொத்தம் 43 எம்.பி.க்கள் மட்டுமே பதவியேற்றனர். கொரோனா லாக்டவுன் காலத்துக்குப் பின்னர் எஞ்சிய எம்.பி.க்கள் பதவியேற்பார்கள் என்று ராஜ்யசபா அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.